பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வாறு இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
பீகார் தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சார்பில் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) அந்த மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரைச் சந்தித்ததைத் தொடர்ந்து இச்செய்தி வெளியாகியுள்ளது. நிதீஷ் குமாரின் ஜேடியு கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
அந்தக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரியுடன் சேர்ந்து பிரதான், நிதீஷ் இட ஒதுக்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் அச்சந்திப்பு, தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காக அவ்வப்போது நடக்கும் ஒன்று என பாஜக தலைவர்கள் கூறினர்.
ஆனால், இதன் தொடர்பில் பாஜகவும் ஜேடியுவும் ஓர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் ஓர் அறிவிப்பு வரும் என்றும் தகவல் தெரிந்தோர் கூறினர்.