பாட்னா: பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்தனர்.
பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65.08 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
மீதமுள்ள 122 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
காலை 9 மணி நிலவரப்படி 14.55 விழுக்காட்டு வாக்குகள் பதிவான நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 31. 38 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின.
காலையில் இருந்தே வாக்குப்பதிவைச் செலுத்த மக்கள் ஆர்வமுடன் வந்துகொண்டே இருக்கின்றனர்.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47. 62 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையத் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
20 மாவட்டங்களில் அடங்கியுள்ள 122 தொகுதிகளில், 136 பெண்கள் உட்பட மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 1 கோடியே 95 லட்சம் ஆண் வாக்காளர்களும் 1 கோடியே 74 லட்சம் பெண் வாக்காளர்களும் 943 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 95 லட்சம் ஆண், 1 கோடியே 74 லட்சம் பேர் பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 943 பேரும் வாக்களிக்க உள்ளனர்.
இந்தத் தேர்தலுக்காக 45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிவரை நடைபெற்றது.
பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்டவற்றில் மட்டும் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடக்கிறது. ஆட்சியைப் பிடிப்பது எந்தக் கூட்டணி என்று அப்போது தெரிய வரும்.
சாதனை படைக்க மோடி அழைப்பு
இந்த நிலையில் பிரதமர் மோடி தமது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பீகார் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“குறிப்பாக, முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள், தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

