பாட்னா: தங்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் சிறைபிடித்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.
பாகல்பூர் மாவட்டம், கோராதியில் அமைந்துள்ளது காந்தி மேல்நிலைப் பள்ளி. அங்கு பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 300 பேருக்குப் பொதுத் தேர்விற்கான நுழைவு அனுமதி அட்டை இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மாணவர்கள், அப்பள்ளி ஆசிரியர்களைத் தாக்கி, ஒரு வகுப்பறைக்குள் அடைத்து வைத்தனர்.
பள்ளியின் முதல்வர் எப்படியோ அவ்விடத்திலிருந்து தப்பிவிட்டார்.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 150 மாணவர்களுக்கு தேர்வெழுதுவதற்கான அனுமதி அட்டை கிடைக்காததால் அவர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் கூறினர்.
இம்முறையும் அதே நிலை ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை மீட்டனர்.
“கற்பிக்கும் பணிதான் எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்வு அனுமதி அட்டை அனுப்புவது பீகார் பள்ளித் தேர்வு வாரியத்தின் வேலை. அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை,” என்று பிணை பிடிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர் கூறினார்.