புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் அதிபர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடா்ந்தது.
இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் உள்ளடங்கிய அமர்வு, மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநர் மற்றும் அதிபருக்குக் காலக்கெடு விதித்து ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும், இந்தத் தனிப்பட்ட வழக்குடன், சட்டப்பிரிவு 200கீழ் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசம் குறித்தும், காலக்கெடுவுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் அதற்கான சரியான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகளுக்கு அதிபர் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.
அதிபர் முர்மு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் தலைமை நீதிபதியின் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வெள்ளிக் கிழமை (மே 16) அமைக்கப்பட உள்ளது.