மும்பை: புனே நகைக்கடை வியாபாரியிடம் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தோர் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த சில நாள்களுக்கு முன்னர் மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்தொடர்பில் காவல்துறையினர் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.
அந்தக் கொலைக்குச் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) புனேயில் பிரபல நகைக்கடை வியாபாரி ஒருவருக்கு பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். “ரூ.10 கோடி தராவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவோம்,” என நகைக்கடை வியாபாரிக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.
அந்த வியாபாரி அதன் தொடர்பில் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
புகாரின் அடிப்படையில், இணையக் குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்கின்றனர். நகைக்கடை வியாபாரியின் பெயர் உள்ளிட்ட எந்தத் தகவலையும் காவல்துறை தெரிவிக்க மறுத்துவிட்டது.

