சென்னை: அதானி, அம்பானி போன்ற தனிப்பெரும் முதலாளிகளே பாஜக அரசில் வளர்ச்சி கண்டுள்ளனர். அவர்களுக்காகப் பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்துச் சட்டங்களை இயற்றுகிறது. அவ்வாறு இயற்றப்படும் சட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நடைமுறைப் படுத்துகிறோம் என பாஜக கூறி வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.
மே முதல் நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அதில், “உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டல் கொடுமை உலகெங்கும் காலமெல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டேதான் உள்ளது.
“முதலாளித்துவம் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. ஜனநாயகம், சமூகநீதி போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டே, முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் பற்பல வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது.
“உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்பட்டு, தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர்.
“இந்தியாவிலும் இந்நிலையைத் தெளிவுறக் காணமுடிகிறது. குறிப்பாக, முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வருகிறது. அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக உருவெடுத்துள்ளனர்.
“ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரையும் ஒடுக்கி முடக்கும் வகையில் இன்றைய பாஜக அரசு இயங்கிவருகிறது.
“அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாவலர்களாக இந்திய ஆட்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில், இந்திய தொழிலாளர் வர்க்கம் அனைவரும் ஒருங்கிணைந்து அடிப்படை உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரங்களுக்காகவும் போராட உறுதியேற்போம். உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம். சுரண்டிக் கொழுக்கும் அரசியலுக்குக் குழிபறிப்போம்,” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “வரும் மே 31ஆம் தேதி மதச்சார்பின்மைக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிற பாஜகவை கண்டித்து வகுப்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மாபெரும் பேரணி நடத்த இருக்கிறோம். லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்,” என்று கூறினார்.