புதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 15) வெளியிடப்பட்டது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய பாஜக தேர்தல் அறிக்கையை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அப்போது, “வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் கூடிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பலரும் எதிர்பார்த்த வகையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் மூன்று கோடிப் பேருக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்; இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஐந்தாண்டுகள் தொடரும்; பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 விழுக்காட்டுத் தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும்; பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு அணையாடை(சானிட்டரி நாப்கின்) வழங்கப்படும்; இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளியல் நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற பல உறுதிமொழிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும் என்றும் திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மானிய விலையில் எரிவாயு உருளை கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அடுத்த கட்டமாக அனைத்துச் சிற்றூர்களுக்கும் குழாய் மூலமாக எரிவாயு விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மையமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இளைஞர்களின் கனவை நனவாக்கப் பணியாற்றுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘தமிழ்மொழி மீது தனிக் கவனம்’
இந்தியாவின் பெருமைமிகு தமிழ்மொழி வளர்க்கப்படும் என்றும் தொன்மையான மொழியான தமிழை உலகளவில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்மொழி பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், திருவள்ளுவர் பெயரில் பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.