பெங்களூரு: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டி, வேறு இடங்களுக்கு அனுப்பியதாகக் கூறி, இந்தியாவின் கர்நாடக மாநில பாஜக எம்.பி. பிரதாப் சிம்மாவின் சகோதரர் விக்ரம் சிம்மா சனிக்கிழமை (டிசம்பர் 30) கைதுசெய்யப்பட்டார்.
ஹசன் மாவட்டத்தில் அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இப்போது, வனத்துறையின் காவலில் விக்ரம் சிம்மா வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, மரங்களை வெட்டியதில் விக்ரமுக்குத் தொடர்பிருப்பதை அறிந்து, வனத்துறை அவரைத் தேடி வந்தது. ஆனால், அவர் தப்பிவிட்டார். இந்நிலையில், மின்னணுக் கண்காணிப்புக் கருவிகளின் துணையுடன் அவர் பெங்களூரில் பதுங்கி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக ‘என்டிடிவி’ செய்தி தெரிவிக்கிறது.
“அம்மரங்கள் ஒவ்வொன்றும் 50 முதல் 60 ஆண்டுகளாக இருந்து வந்தவை. அவற்றை வெட்டியது பெருங்குற்றம். வனப் பாதுகாப்புச் சட்டம், மரப் பாதுகாப்புச் சட்டம் என எல்லாவற்றையும் மீறி விக்ரம் சிம்மா செயல்பட்டுள்ளார்,” என்று கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே ‘இந்தியா டுடே’ ஊடகத்திடம் கூறினார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாகத் தமது பெயர் அடிபட்ட நிலையில், சகோதரர் கைதும் திரு பிரதாப் சிம்மாவிற்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
2023 டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை கூடியிருந்தபோது பார்வையாளர் மாடத்திலிருந்து இருவர் குதித்து, புகைக்குண்டுகளை வீசினர்.
அவர்களில் ஒருவருக்கு திரு பிரதாப் சிம்மாவின் அலுவலகம் மூலமாகத்தான் பார்வையாளர் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.