கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், பராசத் நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்வபன் மஜும்தார் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், மஜும்தாரை வேட்பாளராக அறிவித்ததால் பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மஜும்தாருக்கு எதிராக கட்சியின் தேர்தல் அலுவலகத்திலும் மாவட்ட அலுவலகங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மஜும்தார் அனைத்துலகப் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்றும் அதற்காகக் கைது செய்யப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்தபோது உறுதிமொழிப் பத்திரத்தில் அவர் தன்மீதான குற்றங்களை மறைத்துள்ளதாகச் சொந்தக் கட்சியினரே அவர்மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், தன்மீது அசாம் மாநிலத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு குறித்து மஜும்தார் உறுதிமொழிப் பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்துள்ளார் என்றும் அவர் தனது கல்வித் தகுதி மற்றும் சொத்துக்கள் குறித்தும் தவறான தகவல்களை அளித்துள்ளார் என்றும் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.