புதுடெல்லி: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி, மகாராஷ்டிராவில் பின்பற்றிய அதே பாணியை அமலாக்கத் திட்டமிட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இது, மத்தியில் அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில், இரண்டாகப் பிரிந்த சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இதன் முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை அமர அனுமதித்தது பாஜக. ஈராண்டு ஐந்து மாதங்களுக்கு முதல்வராக இருந்தார் ஏக்நாத் ஷிண்டே.
2024ல் நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது பாஜக கூட்டணி. வெற்றிக்குப் பிறகு தனது போக்கை மாற்றிய பாஜக, தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக நியமித்தது.
தேர்தலைச் சந்திக்க முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ஷிண்டே, துணை முதல்வராகப் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
பிளவுபட்ட மற்றொரு கட்சியும் தமது கூட்டணியின் தலைவருமான தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இந்த உத்தியையே பாஜக பீகார் மாநிலத்திலும் பயன்படுத்தும் என்ற கருத்து எழுந்துள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரான முதல்வர் நிதிஷ் குமார், ஒரு வலுவான தலைவராக உள்ளார். ஆனால், வயது மூப்பின் காரணமாக நிதிஷ்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், ஜேடியுவுக்கு சமமான தொகுதிகளைப் பிரித்து அளித்துள்ளது பாஜக (தலா 101 தொகுதிகள்). எனினும், ஜேடியுவின் வேட்பாளர்கள், பாஜகவை விடக் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்றால், மகாராஷ்டிரா உத்தியை பாஜக கையில் எடுக்கும் என்று கூறப்படுவதாக இந்து தமிழ்த் திசை தெரிவித்துள்ளது.

