கோட்டயம்: கேரள மாநிலத்திலுள்ள கோட்டயத்தின் கலதிபடியில் லாட்டரி சீட்டுகளை விற்றுவரும் ரோசம்மா, தன்னிடமிருந்து திருடுவோரைப் பிடிப்பதற்குப் புதுமையான ஒரு முறையைக் கையாண்டார்.
விற்பனைக்கு வைத்த சீட்டுகள் காணாமல் போகத் தொடங்கியபோது, அவர் தன் அண்டைவீட்டாரின் உதவியை நாடி கேமரா பொருத்தப்பட்ட பேனா ஒன்றை வாங்கினார்.
அதன் மூலம் சீட்டுகளைத் திருட மீண்டும் வந்தவர்களை ரோசம்மாவின் நண்பர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
கையும் களவுமாக ஒருவரைப் பிடித்தும் ரோசம்மா புகார் பதிவுசெய்ய வேண்டாம் என முடிவெடுத்தார்.
மீண்டும் திருடமாட்டேன் என்று அந்த ஆடவர் அவரிடம் கூறியிருந்தார். அதே வட்டாரத்தில் உள்ள ஓர் இல்லத்தரசியும் லாட்டரி சீட்டைத் திருடியவர்களில் ஒருவர். அவரையும் ரோசம்மா மன்னித்து விட்டார்.
மூன்று வயதிலிருந்தே பார்வையிழந்த ரோசம்மாவுக்குச் சிகிச்சை ஏதும் பலனளிக்கவில்லை. 2014ஆம் ஆண்டு தன்னைப் போல் பார்வையிழந்த சுபாஷ் என்பவரை அவர் மணந்துகொண்டார்.
ஆனால், கல்லீரல் அழற்சி காரணமாக சுபாஷ் உயிரிழந்ததை அடுத்து ரோசம்மா பிழைப்பு நடத்தச் சிறு லாட்டரி கடை ஒன்றை கலதிபடியில் தொடங்கினார்.