புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன மூன்று பேர் நீர்வீழ்ச்சிக்கு அருகே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் சிங், 40, யோகேஷ் சிங், 32, மற்றும் வருண் சிங், 15 ஆகியோர் மார்ச் 4ஆம் தேதி பில்லாவரில் உள்ள லோஹாய் மல்ஹார் கிராமத்திற்கு திருமண விழாவில் பங்கேற்கச் சென்றனர்.
திருமண ஊர்வலம் சுராக் கிராமத்தை அடைந்தபோது மூவரும் மர்மமான முறையில் காணாமல் போயினர் என்று தினமணி தகவல் தெரிவித்தது.
அவர்களில் ஒருவர், தனது குடும்பத்தினரிடம் திருமணத்திலிருந்து திரும்பிய போது காட்டில் வழிதவறிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இதனால் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை ஆகியவை இணைந்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தேடலில் ஈடுபட்டனர்.
அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால் காணாமல் போன மூவரையும் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் வானூர்திகளைப் பயன்படுத்தினர்.
வானூர்தி கண்காணிப்பு மூலம், மூவரின் உடல்கள் நீர்வீழ்ச்சிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து உடனடித் தகவல் இல்லை.