சென்னை: அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் விலகினர்.
மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரிடம் இருந்த துறைகள் அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் மாதம் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் பதவி இழந்தார். 2024 செப்டம்பர் 26ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அவர் அமைச்சராக பதவியேற்றார்.
இதுகுறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்த உச்ச நீதி மன்றம் “ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் முடிவு செய்து சொல்லவேண்டும்,” என்று கெடு விதித்தது.
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால், மீண்டும் அமைச்சரானார்.
இந்நிலையில், பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம், பெண்கள் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
இந்த விவகாரத்தில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சூழலில் அமைச்சரவையில் இருந்து இருவரும் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் பொன்முடி, செந்தில் பாலாஜி இருவரும் நேற்று பதவி விலகினர்.
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையை ஆறாவது முறையாக மாற்றம் செய்வது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரின் பதவி விலகலை ஏற்கும்படி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதை ஏற்று அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்தது.
அதன்படி போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்துறையும் வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவருக்கு ராஜ கண்ணப்பனின் பால்வளத்துறை மீண்டும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இன்று (28.04.2025) மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அவர்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.