இந்தியாவில் சிறுவன் ஒருவன் தமது நோய்வாய்ப்பட்ட தந்தையை மருத்துவமனைக்கு தள்ளுவண்டியில் தள்ளிச்செல்லும் காணொளி சமூகத் தளங்களில் பகிரப்பட்டது. இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு இருக்கும் அவலநிலையை இந்தக் காணொளி எடுத்துக்காட்டுகிறது.
ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் அவன் தாயார் உதவியுடன் தமது தந்தையை தள்ளுவண்டியில் தள்ளிச்செல்லும் காட்சி காணொளியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு நோயளியை அவர்கள் தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்சென்றனர்.
போபால் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது.
ஆம்புலன்ஸ்க்காக அவர்கள் அழைத்ததாகவும் 20 நிமிடங்கள் காத்திருந்த பின்னரும் உதவி வரவில்லை என்று சிறுவனின் குடும்பத்தார் குறிப்பிட்டனர். இறுதியில் தாங்களாகவே தள்ளுவண்டியில் தந்தையை அழைத்து செல்ல முடிவெடுத்தனர்.
இது குறித்த விசாரணையை மேற்கொள்ள மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

