லக்னோ: காரை ஹெலிகாப்டராக மாற்றும் முயற்சியில் இறங்கிய சகோதரர்கள் இருவர் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிட்டத்தட்ட தங்கள் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் அவர்கள் இருந்த நிலையில், காவல்துறையின் தலையீட்டால் அவர்களின் கனவு கலைந்துபோனது.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சகோதரர்கள் தங்கள் மாருதி சுசுக்கி வேகன் ஆர் காரில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்திருந்தனர். காரின் பின்னால் வால்பகுதியையும் கூரையில் சுழலியையும் இணைத்து, கிட்டத்தட்ட ஒரு ஹெலிகாப்டர் போலவே அதனை மாற்றியிருந்தனர்.
அவர்களின் முயற்சி உள்ளூர்வாசிகளின் கவனத்தை ஈர்த்த நிலையில், காவல்துறையின் கவனத்திற்கும் சென்றது.
அந்தப் புத்தாக்க முயற்சி முடியும் முன்னரே காவல்துறை அதில் தலையிட்டது. உரிய அனுமதியின்றி வாகனத்தில் மாற்றம் செய்வது சட்டத்திற்கு முரணானது எனக் கூறி, காவல்துறை அவ்வாகனத்தைப் பறிமுதல் செய்தது.
காவல் நிலையத்தில் கார் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. இணையவாசிகள் பலரும் சகோதரர்களின் புத்தாக்க முயற்சியைப் பாராட்டினர். அதே நேரத்தில், சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் சிலர் அறிவுரை கூறினர்.
இந்தியாவில் தனிமனிதர்கள் சிலர், குறைந்த வசதிகளே இருந்தும் புதுமையான படைப்புகளை உருவாக்குவதற்கு இது ஒரு சான்றாக உள்ளது. அதே நேரத்தில், பாதுகாப்பையும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.