பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் 20 வயதில் பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கிய அன்கே கௌடா என்ற ஆடவர், தற்போது 20 லட்சம் புத்தகங்களுடன் கூடிய இலவச நூலகத்தை அமைத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
தனது வருமானத்தில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகையை புத்தகம் வாங்கவே செலவழித்துள்ளதாகக் கூறும் அன்கே கௌடா, தற்போது மைசூரில் தான் குடியிருந்த வீட்டை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு இந்த நூலகத்தை உருவாக்கியுள்ளார். அவரது பொதுநல மனப்பான்மையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நூலகத்தில் கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அன்கே கௌடாவின் நூலகத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் வருகை தந்து புத்தகங்களைப் படித்து பயன்பெற்று வருகின்றனர்.