மகாராஷ்டிரா: ஐபிஎல் 2025 பருவம் கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பந்தடித்த கோல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி, 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கேகேஆர் - ஆர்சிபி போட்டியைப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைப்பேசியில் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐபிஎல் போட்டியைப் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயலைப் பயணி ஒருவர் காணொளி எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் முதல்வர் தேவேந்திர பட்நாவிசை அவர் ‘டேக்’ செய்திருந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.