திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆஷ்னா தம்பி என்ற அந்த இளம் பெண் தமது சொத்து மதிப்பு ரூ.84 மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
அங்குள்ள ஏட்டுமானூர் தொகுதியில் இந்திய சோஷலிச ஐக்கிய மையத்தின் (கம்யூனிஸ்ட்) சார்பாக களமிறங்குகிறார் 26 வயதான ஆஷ்னா.
அவரது கையில் ரொக்கமாக 44 ரூபாயும் வங்கிக்கணக்கில் ரூ.40ம் மட்டுமே இருப்பதாக அவர் தமது வேட்புமனுவுடன் கூடிய பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதழியல் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ள ஆஷ்னாவுக்கு, நிலம், தங்கம், வெள்ளி போன்ற எந்தவித அசையும், அசையாச் சொத்துகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குச் சேவையாற்ற விரும்புவதாகவும் அவர்களிடம் இருந்தே நிதி பெற்று தேர்தல் செலவுகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார் ஆஷ்னா.
கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன.
இந்நிலையில், பெரிய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், கையில் 100 ரூபாய்கூட இல்லாமல், தேர்தல் களம்காணும் ஆஷ்னாவுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

