புதுடெல்லி: ஜெர்மனியில் மருத்துவர் ஒருவர் கிறிஸ்துமஸ் சந்தையில் காரால் மோதி நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியத் தூதரகம் செய்து வருகிறது.
ஜெர்மனியின் மேக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, மிகப்பெரிய கடைகள் கொண்ட சந்தை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து சாலையில் செல்வோர் மீது மோதியபடி நிற்காமல் சென்றது. இதில் குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காரைத் தாறுமாறாக ஓட்டி தாக்குதல் நடத்தியவர், சவூதி அரேபியாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் என தெரிய வந்துள்ளது. அவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காரால் மோதி நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் மூவர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
காயம் அடைந்த இந்தியர்களின் குடும்பத்தினரை பெர்லினில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்புகொண்டு தேவையான உதவிகளைச் செய்துவருகின்றனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்தது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜெர்மனியில் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஐவரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. பலர் காயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காயம் அடைந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படுகின்றன,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு சவூதி அரேபிய அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனி மக்கள் மற்றும் அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் இதேபோல் கனரக லாரி ஒன்றைத் தீவிரவாதி தாறுமாறாக ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தினார். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். பின்னர் இத்தாலியில் அந்தத் தீவிரவாதியைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.