புவனேஸ்வர்: ஒடிசாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 1,700 டன் இரும்புத் தாதுக் கனிமங்களை ஏற்றிவந்த பனாமா நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பல், வங்காள விரிகுடாக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
கப்பலில் இருந்த 24 பேரில் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 22 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) ஒடிசாவிலிருந்து புறப்பட்ட அக்கப்பலில் சீனா, மியன்மார், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 கடலோடிகள் இருந்தனர்.
ஒடிசா கரையிலிருந்து 240 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது.
சம்பவம் நடந்த நாளன்று காலை 11.48 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக, அதை இயக்கும் ‘விக்டரி ஸ்டார் குரூப் கோ லிமிடெட்’ நிறுவனம், ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்குத் தகவல் தெரிவித்தது.
உடனடியாகக் கப்பல் மாலுமிகள் அவசர அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படையினரும் கடலோரக் காவற்படையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடலில் மாயமானவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


