புதுடெல்லி: ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றவில்லை என்பதே உண்மை என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அந்தத் திட்டம் வெறும் கட்டுக்கதைத் திட்டம் என்றும் இந்தியா உண்மையாகவே உற்பத்தி மையமாக உருவெடுப்பதற்கு அடிப்படையிலிருந்து மாற்றம் தேவை என்றும் அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80% உதிரிப் பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்பது அந்த உதிரிப் பாகங்களை வெறுமனே ஒன்றுசேர்க்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறது. மாறாக, அந்தத் திட்டம் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவாக்கவில்லை.
“’ஐ-ஃபோன்’கள் முதல் தொலைக்காட்சிப் பெட்டிவரை, அவற்றுக்கான பாகங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்துதான் வருகின்றன. ஆனால் ‘மேக் இன் இந்தியா’ பெயரைச் சொல்லி அந்த பாகங்களை நாம் ஒன்றாக ஒருங்கிணைத்து பொருள்களை உருவாக்குகிறோம்,” என்று ராகுல் காந்தி தமது பதிவில் விமர்சித்துள்ளார்.
சிறு தொழில்முனைவர்கள் பொருள்களை உற்பத்தி செய்ய அதிக ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதற்கான கொள்கை ஆதரவை மத்திய அரசு வழங்கவில்லை எனச் சாடியுள்ளார்.
இந்தியா உற்பத்தியில் தன்னிறைவு பெறாவிட்டால் வேலைவாய்ப்புகள், வளர்ச்சி என்பது வெறும் வெற்று வார்த்தைகளாகவே இருக்கும் என்றும் இந்தியா ஓர் உண்மையான, சக்திவாய்ந்த உற்பத்தி மையமாக மாறுவதற்கும் சீனாவுடன் சரிசமமாகப் போட்டி போடுவதற்கும் அடிப்படை மாற்றம் தேவை என்றும் ராகுல் வலியுறுத்தி உள்ளார்.
அத்தகைய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தமது எக்ஸ் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.