ஹைதராபாத்: இடுப்பிற்குக் கீழ் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் பள்ளிக்குள் புகுந்த ஒரு கும்பல் ரூ.785,000 பணத்தைக் களவாடிச் சென்றது.
இச்சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) இரவு இடம்பெற்றது.
கும்பலின் திருட்டுச் செயல் பள்ளியிலுள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவாகியுள்ளது.
முகமூடி, கையுறை, உள்ளாடை அணிந்திருந்த இருவர் பள்ளிக்குள் புகுந்ததையும் அங்கிருந்த ஓர் இழுப்பறை மேசையில் தேடியதையும் அக்காணொளிகள் காட்டுகின்றன.
பள்ளி நிர்வாகம் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அந்த ‘உள்ளாடைக் கும்பல்’ பல்வேறு பகுதிகளில், குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தின் மாதப்பூர் பகுதியில் தென்பட்ட அக்கும்பல், ஆந்திராவின் திருப்பதி வட்டாரத்திலும் அடிக்கடி கைவரிசை காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது. அக்கும்பல் பூட்டியுள்ள வீடுகளையும் வணிகக் கட்டடங்களையும் குறிவைத்துச் செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.