புதுடெல்லி: ‘சந்திரயான்-3’ திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சந்திரயான்-4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது. நிலவுக்குச் சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே ‘சந்திரயான்-4’ ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
“இந்த ‘சந்திரயான்-4’ பணியானது, நிலவில் ஓர் இந்தியர் தரையிறங்குவதற்கான அடிப்படை தொழில்நுட்பத் திறன்களை அடைவது. பின் இது பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இத்துடன் சந்திரயான் பாலோ-ஆன் பணிகள் தொடர்புடைய விண்வெளிப் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் திறன்களை மேம்படுத்துதல் உட்பட பல விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. 2040ல் நிலவில் மனிதர்களைத் தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது.
“சந்திராயன்-4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் கருவிகள் இரண்டு தொகுப்பின்கீழ் எல்.எம்.வி-3 மற்றும் பி.எஸ்.எல்.வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. விண்வெளித்துறையில் இந்தியா சாதிக்கும் இந்தத் தருணத்தை ஒட்டுமொத்த தேசமும் எதிபார்த்துக்கொண்டு இருக்கிறது.
“இந்நிலையில், ‘சந்திராயன்-4’ வரும் 2027ல் விண்ணில் செலுத்தப்படும்,” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
“2026ல் சமுத்ராயன் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் கடலுக்கு அடியில் 6 ஆயிரம் அடி சென்று மூன்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்வார்கள்,” என்றும் தெரிவித்துள்ளார்.

