சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டின் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அந்த உத்தரவை தற்பொழுது அதே உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த 2006 - 11ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, சென்னை, திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இதில், ஜாபர் சேட், அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ், 2020ல் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதை ரத்து செய்யும்படி ஜாபர் சேட் மனுத் தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ‘‘மனுதாரருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை, 2019ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அதை ரத்து செய்யலாம்,’‘ என்றார்.
இதை ஏற்றுக்கொண்டு, இந்த மனு தொடர்பாக சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் ரத்து செய்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) அன்று இந்த உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

