புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்களை நீக்கி வருவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதன்கிழமை (பிப்ரவரி 4) விசாரணைக்கு வந்தபோது முதல்வர் மம்தா பானர்ஜியே நேரில் முன்னிலையாகி தனது அரசுத் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
மேற்குவங்க மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 1.4 கோடி வாக்காளர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகளுக்காக அவர்களை நேரில் வரவழைத்து துன்புறுத்த வேண்டாம் என்றும் வேறு ஆவணங்கள் இல்லாவிட்டால் ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மம்தா கேட்டுக்கொண்டார்.
மேலும், மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள 8,100 வெளி மாநில மேற்பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மம்தா வாதாடினார்.
முதல்வர் மம்தா தொடுத்த இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதல்வர் மம்தா நேரில் முன்னிலையாகி வாதாடியது நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. மம்தா பானர்ஜி சட்டப்படிப்பை முடித்துள்ளார். அவர் வாதிடும்போது, ‘மூடிய கதவுகளுக்குப் பின்னால் நீதி அழுகிறது’ என்றார்.

