சென்னை: பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுடன் தலா 10 லட்சம் ரூபாய் பணமுடிப்பும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.
கலைஞர் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) வழங்கினார்.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம், 1949இல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். 1950 முதல் 1960கள் முன்னணி நாயகியாக விளங்கினார்.
ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், மங்கையர் திலகம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர். அவருக்கு 2024ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டது.
தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.முத்துராமன் 1960ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது திரைத்துறை பணியை தொடங்கினார். 1970கள் முதல் 1990கள் வரை தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குநராக உயர்ந்தார்.
70க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். அவருக்கு 2025ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டது.

