நகெகியோ, இந்தோனீசியா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கிய வேளையில், மரியா புளோரிடா நோகோ கெலன் எனும் 39 வயது மாது, பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தொடர் நில அதிர்வுகளால் வீடுகளும் கட்டடங்களும் இடிந்து விழுந்த வேளையில், அவசர அறுவை சிகிச்சையின்போது மின்சாரம் தடைபட்டதால், மருத்துவர்கள் கைமின்விளக்குகளைப் பயன்படுத்தி அவருக்குப் பிரசவம் பார்த்தனர்.
கிழக்கு நுசா தெங்காரா மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 54 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்ததால், காயமடைந்தவர்களுக்கு வெளியிலுள்ள கூடாரங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தைக் குறிக்கும் இந்தோனீசியச் சொல்லான ‘கெம்பா’ என்பதைத் தழுவி, சனிக்கிழமை பிறந்த பெண் குழந்தைக்குக் ‘கெம்பிட்டா’ எனப் பெயரிடப்பட்டது. 1.3 கிலோ எடையில் பிறந்த அக்குழந்தை, தற்போது வெளிப்புறக் கூடாரத்தில் உள்ள பராமரிப்புப் பகுதியில் நலமாக உள்ளது.
மகப்பேற்று மருத்துவர் யோனா சாரா பர்டேடே, செயற்கை சுவாசக் கருவி இல்லாத நிலையில் அஞ்சியதாகவும் இறைவனை வேண்டியபடி பிரசவம் பார்த்ததாகவும் கூறினார்.
தங்களைக் கைவிடாமல் காப்பாற்றிய மருத்துவர்களுக்குக் குழந்தையின் தாயார் மரியா நன்றி தெரிவித்தார்.


