புதுடெல்லி: வங்கிக்கடன் பெற ‘சிபில்’ மதிப்பெண் என அழைக்கப்படும் மூன்று இலக்கத்திலான கடன் வழங்கும் தரநிலை இனி கட்டாயம் இல்லை என்று இந்திய நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
தனிநபர் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றைப் பெற ஒருவரின் தகுதியைத் தீர்மானிக்க இந்த மதிப்பெண் பயன்படுத்தப்படுகிறது.
முதன்முறையாக வங்கிக் கடன் பெற விரும்புவோர்க்கு அம்மதிப்பெண் ‘0’ அல்லது அதற்குக் குறைவாக இருக்கும். எனவே, அதனைச் சுட்டிக்காட்டி அவர்களுக்குக் கடன் வழங்க வங்கிகள் இனி மறுக்கக்கூடாது எனவும் அமைச்சு கூறியுள்ளது.
மேலும், ‘சிபில்’ மதிப்பெண்ணை மட்டுமே வைத்து ஒருவர் வங்கிக் கடன் வேண்டி சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தை எடைபோடாமல் மற்ற காரணிகளையும் சீர்தூக்கிப் பார்த்து, அவர்களின் விண்ணப்பங்களை வங்கிகள் ஏற்கலாம் என அது அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, கடன் தகவல் நிறுவனங்கள், ஒருவரின் கடன் அறிக்கையை வழங்குவதற்கு ரூ.100க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கூறினார்.