புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மின்னணு வாக்குப்பதிவு, வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஓராண்டுக்கும் மேலாகப் பதிலளிக்காத இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தை மத்திய தேர்தல் ஆணையம் கடுமையாகச் சாடியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறுவதாக உள்ளன என்று தலைமைத் தகவல் ஆணையர் ஹீராலால் சாமரியா தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 மே 2ஆம் தேதி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ‘விவிபாட்’ எனப்படும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரம், வாக்கு எண்ணிக்கை நடைமுறை ஆகியவற்றின் நம்பகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கும்படி மனு அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் உட்பட, ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகள், முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் குழு அம்மனுவை அளித்தது.
அதற்கு உரிய பதில் கிடைக்காததை அடுத்து, தங்களின் மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவரம் அளிக்கும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் 2022 நவம்பர் 22ஆம் தேதி மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் 30 நாள்களுக்குள் பதில் அளிக்கவில்லை.
அதனையடுத்து, திரு தேவசகாயம் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார்.
அதனைத் தொடர்ந்து, தேவசகாயம் கோரிய தகவலை வழங்காதது தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் மத்திய பொதுத் தகவல் அதிகாரியிடம் (சிபிஐஓ) தலைமைத் தகவல் ஆணையா் ஹீராலால் சாமரியா கேள்வி எழுப்பினாா். அவரது கேள்விக்கும் சிபிஐஓ சரிவர பதிலளிக்கவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த திரு சாமரியா, இதுதொடா்பாக அடுத்த 30 நாள்களுக்குள் எழுத்துபூா்வமாக விளக்கமளிக்குமாறு தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளாா்.