மும்பை: மகாராஷ்டிரா, சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சியின் தலைமையகம் இடுகாடு இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளதால் அங்கு ஆவிகள் நடமாடுவதாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத் கூறியுள்ளார்.
அவை அங்கு வேலை செய்பவர்களை நிம்மதியற்றவர்களாக ஆக்குகின்றன. அலுவலர்களால் வேலை செய்ய முடியவில்லை என்று அவர் சொன்னார்.
மாநகராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட தீயணைப்பு வாகனத்தைத் தொடங்கி வைக்கும் விழாவில் பேசிய அவர், அந்த மாநகராட்சி அலுவலகம் இருக்கும் இடம் முன்னர் இடுகாடாக இருந்தது என்றார். மாநகராட்சி அலுவலகத்தை வேறு ஒரு நல்ல இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள், சமூக ஊடகங்கள் கண்டனம்
அவரது கூற்றுக்கு எதிர்க்கட்சிகளும் சமூக ஊடகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே சஞ்சய் இதுபோன்ற அறிவியல் ஆதாரமற்ற மூடநம்பிக்கை பேச்சுகளைப் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளன.

