சிர்மௌர்: இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரம், இமாச்சலம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், சிர்மௌர் மாவட்டத்தில் போண்டா உட்பிரிவின் அம்போயா பகுதியில் தண்ணீர் ஆலை இடிந்து விழுந்ததில் கடைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக சிர்மூர் துணை ஆணையர் சுமித் கிம்தா தெரிவித்தார்.
மாவட்டத்தில் மோசமான வானிலை காரணமாக தேசிய நெடுஞ்சாலை உட்பட 26 சாலைகள் செப்டம்பர் 26ஆம் தேதி மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை மாலையிலிருந்து சாலைகள் மூடப்பட்டு வருகின்றது. இதுவரை மொத்தம் 71 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யமுனை ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில், சில சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கனமழை காரணமாக போன்டா சாஹிப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் செப்டம்பர் 26ல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் 12 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 183 பேர் உயிரிழந்ததாகவும். 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை ரூ.1,332 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

