புதுடெல்லி: சிறு பொட்டலங்களில் உள்ள தேங்காய் எண்ணெய்யைத் தலை முடிக்காக மட்டும் பயன்படுத்துவதா அல்லது அதை சமையலுக்கும் உபயோகிக்கலாமா என்ற குழப்பத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் 15 ஆண்டுகளாக இருந்து வந்தது.
குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் வகையில், சிறு பொட்டலங்களில் இருக்கும் தேங்காய் எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தக்கூடியதே என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று (டிசம்பர் 18) தீர்ப்பளித்தது. தலைமுடிக்கு மட்டும்தான் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்படாத தேங்காய் எண்ணெய்க்கு இது பொருந்தும்.
அப்படியென்றால் தேங்காய் எண்ணெய் ஐந்து விழுக்காடு பொருள், சேவை வரிக்குத் தகுதிபெறும். சமையல் எண்ணெய் வகைகளுக்கு ஐந்து விழுக்காடு பொருள், சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. முடி அலங்கார எண்ணெய் வகைகளுக்கு 18 விழுக்காடு பொருள், சேவை வரி செலுத்தவேண்டும்.
எந்த எண்ணெய் வகைகளுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று விவாதம் எழுந்ததைத் தொடர்ந்து இந்தக் குழப்பம் தலைதூக்கியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் என இரு தரப்பும் பெருமூச்சு விடும் வண்ணம் அமைந்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2009ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்த வரி தொடர்பான கருத்துவேறுபாடு ஒரு முடிவுக்கு வந்தது இரு தரப்புக்கும் நிம்மதி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.