கோவை: கோவையில் உள்ள பெரிய கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாண்ட ஊழியர்களின் உடல்கள் எட்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளன.
சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் உள்ள 15 அடி விட்டமும் 40 அடி ஆழமும் கொண்ட கழிவுநீர்த் தொட்டியில் இருந்த மோட்டார் இயந்திரம் ஒன்று பழுதானது.
அதையடுத்து ஒப்பந்த ஊழியர்களான 38 வயது அர்ஜுன்குமாரும் 27 வயது எலக்ட்ரீசியன் சுரேஷும் மோட்டாரைப் பழுதுபார்த்துவிட்டு தொட்டியிலிருந்து வெளியேறியபோது எதிர்பாராவிதமாக அர்ஜுன்குமார் தலை இடித்துத் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.
அவரைக் காப்பாற்ற முற்பட்ட சக ஊழியரான சுரேஷ் தொட்டிக்குள் இறங்கியபோது நச்சு வாயுவால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி தொட்டிக்குள் விழுந்தார்.
அந்த இரண்டு ஊழியர்களின் உடல்களும் 8 மணிநேரம் கழித்து தொட்டியிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டன.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்களும் மாநகராட்சி ஊழியர்களும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்றி அதிகாரிகள் உடல்களை மீட்டனர்.

