புதுடெல்லி: கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த ஐந்து பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். எனினும், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இந்தச் சம்பவத்தின்போது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் நாடாளுமன்றத்தில் இருந்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதியோடு 23 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தாக்குதலில் உயிரிழந்த ஒன்பது பேரின் புகைப்படங்களுக்குத் துணை அதிபரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர், மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு, குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.