புதுடெல்லி: ஓமான் கடற்பகுதியில் பனாமா நாட்டின் கொடியுடன் பயணம் செய்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இத்தாக்குதலின்போது கப்பலில் இருந்த 14 இந்தியக் கடலோடிகளில், 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஓர் இந்தியக் கடலோடி மாயமான நிலையில், அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், அனைத்துலக நீர்வழிகளில் வணிகக் கப்பல்கள், கடலோடிகள், பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தையும் வணிக நடவடிக்கைகளையும் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஓமானில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடலோடிகளை மீட்கும் நடவடிக்கைகளில் முழு ஒத்துழைப்பு அளித்த ஓமான் அரசுக்கு இந்தியா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

