நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகளுடன் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
ஆடு மாடுகள் வளர்ப்பு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் தொடர்ந்து பேசி வரும் சீமான், ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காடுகளை பாதுகாப்பதாக கூறி வனத்துறையினர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் மேய விடுவதற்கு அனுமதிப்பது இல்லை. இதன் காரணமாக ஆடு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் வருகிற 10ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் மாநாட்டை நடத்த இருக்கிறார்.
இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆடு மாடுகளுடன் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு அழைப்புவிடுத்து மாடுகளின் பின்னணியில் சீமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மதுரை வீராகனூர் கிராமத்தில் வருகிற 10ஆம் தேதி மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்கிற முழக்கத்தை முன்வைத்து ஆடு மாடுகளின் மாநாடு நடக்கிறது.பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்,” என்று அவர் கூறியுள்ளார்.