தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூரில் அதிரடிச் சோதனையில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

1 mins read
844d7d22-288b-4db4-98ea-c6cf99d10f3a
மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினர். - படம்: ஊடகம்

மணிப்பூர்: மணிப்பூரின் காக்சிங் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கிளர்ச்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காக்சிங் மாவட்டத்தின் டோக்பாசிங் மொய்ரங்கோம் மலைப்பகுதியில் ஏப்ரல் 9ஆம் தேதி புதன்கிழமையன்று சோதனை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினர் ஐ.ஈ.டி. எனும் நவீன வெடி குண்டு, கையெறி குண்டுகள், பல ரகங்களைச் சேர்ந்த ஏராளமான துப்பாக்கி, அதன் தோட்டக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

அதுபோல், கிழக்கு இம்பால் மாவட்டத்தின் யாரால்பாத் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தின் எதிரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாசக்கார ஆயுதங்கள் அனைத்தையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்டுள்ள ஆயுதங்கள் போரோம்பாத் காவல் நிலையத்தில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, அம்மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தின் லாம்ஸாங் சந்தையின் அருகில் தடை செய்யப்பட்ட காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 45 வயதுடைய கிளர்ச்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, மணிப்பூர் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவரின் ஆட்சியானது அங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மணிப்பூரிலுள்ள கிளர்ச்சியாளர்கள் தாங்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடித்த பொருள்களை ஒப்படைக்க அரசு விதித்திருந்த காலக்கெடுவானது கடந்த மார்ச் 6ஆம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்