திருவனந்தபுரம்: கேரளச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டபோது அக்கூட்டணி ஏறக்குறைய 92 இடங்களில் முன்னணியில் இருப்பது தெரியவந்தது.
வாக்குகள் எண்ணப்பட்டபோது, முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்துவந்தனர்.
இடது ஜனநாயக முன்னணி 42 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓரிடத்திலும் மட்டுமே முன்னிலை வகித்தன.
மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றுள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 95 தொகுதிகளில் களமிறங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இதர தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.
இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளிலும் மீதமுள்ள இடங்களில் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி 43 மையங்களில் எண்ணப்பட்டன.
காலை 11 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 93 தொகுதிகளில் முன்னிலை வகிப்பது தெரியவந்தது.
ஆட்சியமைக்க அருதிப்பெரும்பான்மை எண்ணிக்கையாக 71 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். எனவே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

