ஹைதராபாத்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக மிளிர்ந்த சானியா மிர்சாவை ஹைதராபாத் தொகுதியில் களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அத்தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளாகவே ‘ஏஐஎம்ஐஎம்’ வெற்றிபெற்று வந்துள்ளது.
1984 முதல் 2004 வரை ‘ஏஐஎம்ஐஎம்’ கட்சியின் நிறுவனர் சுல்தான் சலாவுதீன் ஓவைசியும் அவரது மறைவுக்குப்பின், அதாவது 2004 முதல் அவருடைய மகன் அசாதுதீன் ஓவைசியும் ஹைதராபாத் தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் 40 ஆண்டுகாலக் கோட்டையைத் தகர்க்க காங்கிரஸ் சார்பில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பிரபலத்தை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவைக் களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சித் தலைமையும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சானியா மிர்சாவை வேட்பாளராக நிறுத்த ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை சானியா போட்டியிட மறுத்தால் அவருடைய தந்தை இம்ரான் மிர்சா களமிறக்கப்படலாம் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.