பெங்களூரு: கர்நாடகாவில் காலியாக உள்ள பாகல்கோட்டை, தாவணகெரே தெற்கு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
பாகல்கோட்டையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட துணை முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரசின் வெற்றி குறித்து மிகுந்த நம்பிக்கை தெரிவித்தார்.
“எங்களது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஐந்து முக்கிய இலவசத் திட்டங்களால் ஏழை மக்கள் பேரளவில் பயனடைந்துள்ளனர். நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அவர்களின் முகத்தில் உள்ள புன்னகையே தேர்தல் முடிவைச் சுட்டிக் காட்டுகிறது.
“மேலும், இவ்விரு தொகுதிகளும் காங்கிரசின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். பாஜக கடந்த முறையைவிடக் குறைவான வாக்குகளையே பெறும்,” என்றார்.
தற்போது முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சர்களும், மறுபுறம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜகவினரும் அங்குத் தீவிரமாகத் தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருவதால், கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

