புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா அமலாக்கத் துறையினரால் சனிக்கிழமை (மே 9) கைது செய்யப்பட்டார்.
பொதுத்துறை அமைச்சரான அவரது வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரண்டாவது முறையாகச் சோதனை மேற்கொண்டு அதன் முடிவில் அவரைக் கைது செய்தனர்.
போலி நிறுவனங்கள் மூலம் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கைப்பேசிக் கருவிகளைக் கொள்முதல் செய்ததாகக் கணக்குக் காட்டினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார் சஞ்சீவ் அரோரா.
இதற்காகப் போலி நிறுவனங்களில் இருந்து அவர் ஜிஎஸ்டி ரசீதுகளைப் பெற்றுள்ளார். இது தொடர்பாக எழுந்த புகார்களை அடுத்து, சஞ்சீவ் அரோராவின் வீடு, அலுவலகம், அவருடன் தொடர்புபடுத்தப்பட்ட நிறுவனங்களில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
மேலும் சஞ்சீவ் அரோராவுடன் தொடர்புள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.157.12 கோடி மதிப்புள்ள அசையும், அசையாச் சொத்துகளையும் தற்காலிகமாக முடக்கியுள்ளது அமலாக்கத் துறை.
இந்நிலையில், பாஜகவில் சேர வேண்டும் என்பதற்காக சஞ்சீவ் அரோராவுக்கு அமலாக்கத்துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதேபோன்ற அழுத்தம் காரணமாகவே ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் அசோக் மிட்டல் பாஜகவில் இணைந்ததாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

