ரிஷிகேஷ்: இந்தியாவில் நீரில் செல்லும் விமானம் ரிஷிகேசில் உள்ள கங்கை தடுப்பணையில் ஏப்ரல் 6ஆம் தேதி வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
அந்நாட்டில் கடல் வழித்தடங்களும் நீர்நிலைகளும் அதிக அளவில் இருக்கின்றன. விமான நிலையம் அமைக்க முடியாத பகுதிகளில் நீரில் செல்லும் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த அது திட்டமிடுகிறது.
அதன் ஒரு பகுதியாக ரிஷிகேசில் நீர் விமானப் போக்குவரத்தை ஏற்படுத்த ‘ஸ்கைஹாப் ஏவியேஷன்’ என்ற நிறுவனம் தயாராகி வருகிறது.
அந்நிறுவனத்தின் முதல் நீர் விமானம், ரிஷிகேசில் உள்ள கங்கை தடுப்பணையில் ஏப்ரல் 6ஆம் தேதி பரிசோதிக்கப்பட்டது.
கங்கை நதியில் சுமுகமாக அந்த விமானம் தரையிறங்கி, மேலெழும்பியதன் மூலம் அங்கு நீர் விமானப் போக்குவரத்து சாத்தியமாகும் எனக் கூறப்படுகிறது
“ரிஷிகேசில் நீர் விமானப் போக்குவரத்துக்கான சான்றிதழ் பெறும் நடவடிக்கையில் நாங்கள் இறங்கியுள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன் வர்த்தக ரீதியாக நாங்கள் அதைத் தொடங்குவோம்,” என அந்நிறுவனத்தின் நிறுவனர் அவானி சிங் கூறினார்.
லட்சத் தீவு பகுதியிலும் ஸ்கைஹாப் நிறுவனம் நீர் விமானப் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
அங்கு ஐந்து தீவுகளை இணைக்கும் வகையில் 19 இருக்கைகள் கொண்ட நீர் விமானத்தை முதல் கட்டமாக இயக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

