புதுடெல்லி: நீதிமன்றங்கள் சமய நம்பிக்கையிலும் அதன் கோட்பாடுகளிலும் சீர்திருத்தத்தை முன்னெடுக்க முடியாது என புதன்கிழமை (ஏப்ரல் 29) உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் பி.வி நாக ரத்தினா, எம் எம் சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
ஏப்ரல் 29ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, கடவுள் நம்பிக்கையற்றோர், கோயிலில் விதிக்கப்பட்டுள்ள சமய ரீதியான கட்டுப்பாடுகளை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா ? எனக் கேள்வி எழுப்பினார்.
தீர்ப்புக்கு ஆதரவாகவும், தீர்ப்புக்கு பிறகு சபரிமலைக்குச் சென்று எதிர்ப்புகளைச் சந்தித்த கனக துர்கா, பிந்து அம்மினி ஆகியோர் சார்பிலும் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில், “நம்பிக்கை உள்ளதோ, இல்லையோ ஆனால் கோயிலுக்கு செல்லும் போது மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். சட்ட ரீதியான உரிமையை அவ்விருவரும் மீறவில்லை. சட்ட ரீதியான உரிமையை மீட்கவே போராடி வருகின்றனர்,” எனக் கூறினார்.
அப்போது நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், “உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொரு நம்பிக்கையாளரும் இப்படிதான் வழிபாடு இருக்க வேண்டும் எனச் சொல்லத் தொடங்குவார்கள். அதற்கு முடிவே இல்லாமல் போகும்,” எனக் குறிப்பிட்டார்.
மேலும், வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பது தான் இந்தியாவின் பலம். 10 வயது முதல் 50 வயது வரையிலுள்ள உண்மையான ஐயப்ப பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதில்லை,” எனக் கூறினார்.
அவ்வழக்கின் விசாரணை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

