புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். அண்மையில், பன்னாட்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்திருந்தார்.
ஓய்வுக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்குவார் எனப் பேசப்பட்டது. அதனை உறுதிசெய்யும் வகையில் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்த உறுப்பினர் அட்டையை கிரிக்கெட் வீரரின் மனைவியும், குஜராத் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ரிவாபா ஜடேஜா பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கைக்காக பாஜகவினர் உறுப்பினர் சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அவரது மனைவியும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ரிவாபா ஜடேஜா, இந்தத் தகவலை தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.
ரிவாபா ஜடேஜா கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாம்நகர் வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை விட 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தனது கணவர் ரவீந்திர ஜடேஜா, பாஜகவில் முறைப்படி இணைந்துள்ளதை ரிவாபா அறிவித்துள்ளார்.