புதுடெல்லி: சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுகள் உள்ளிட்டவற்றால் அடிமையாகும் இளையர்கள் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு இணைய போதைக்கு அடிமையாகி, அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் சிறுவர்கள், வாலிபர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் திட்டத்திற்குத் தலைமை தாங்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் யாதன் பால் சிங் பல்ஹாரா இதுகுறித்து கூடுதல் விவரங்களைச் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
“இவ்வாண்டு இந்தியாவின் பொருளாதார ஆய்வில், இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துவது சிறுவர்கள், இளம் வயதினருக்கு மனநலப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.
“அப்படி பாதிக்கப்பட்ட இளையர்களை இணையத்தில் இருந்து விலக்கி வைக்க பள்ளி மற்றும் குடும்ப அளவிலான தலையீடுகளின் அவசரத் தேவையையைும் எடுத்துக்காட்டுகிறது,” என்று விவரித்தார்.
எனவே தொழில்நுட்ப அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்பட உள்ளது என்றார் யாதன் பால் சிங்.
இந்த நிலையம் இணையம் சார்ந்த பல்வேறு போதை பழக்க வழக்கங்களை விரிவாகக் கையாளும். இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டுடன் தொடர்புடைய மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் அடிமையாதல் ஆகியவற்றைக் குறைக்க உதவும் என்று யாதன் பால் சிங் குறிப்பிட்டார்.
“இந்த நிலையம் இளையர்களிடையே தொழில்நுட்பத்தின் அதிகப்படியான மற்றும் சிக்கலான பயன்பாட்டினால் பாதிக்கப்படுவதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்கணிப்பு மாதிரியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் ரூ.14 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்,” என அவர் கூறினார்.

