நாகரிகமாக உடை உடுத்தி, கண்ணாடி அணிந்து சென்ற ஆடவர் ஒருவரை மேல்சாதியினர் என்று கூறிக்கொண்ட கும்பல் ஒன்று அடித்து, உதைத்தது.
இச்சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம் மோட்டா எனும் சிற்றூரில் சென்ற மே மாதம் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்தது.
இதன் தொடர்பில் எழுவர்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
சம்பவ நாளன்று காலையில் அந்த ஆடவர் தம் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள எழுவரில் ஒருவர் அவரை அணுகினார்.
அவரை இழிவுபடுத்திய அந்தக் கும்பல் பேர்வழி, ‘இப்போதெல்லாம் வரம்புமீறி நடந்துகொள்வதாகக்’ கூறி அவரை எச்சரித்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அன்றிரவு அவ்வூரிலுள்ள கோவிலுக்கு வெளியே அந்த ஆடவர் நின்றுகொண்டிருந்ததை, அக்கும்பலைச் சேர்ந்த அறுவர் கண்டனர். கையில் தடியுடன் சென்ற அக்கும்பல், அந்த ஆடவர் நல்ல உடை உடுத்தியிருப்பதும் கண்ணாடி அணிந்திருப்பதும் ஏன் என்று கேட்டனர். பின்னர் அக்கும்பல் அவரை அங்குள்ள ஒரு பால்பண்ணைக்குப் பின்புறமாக இழுத்துச் சென்று, அடித்து உதைத்ததாகக் காவல்துறை விளக்கியது.
தகவலறிந்து மகனைக் காப்பாற்ற விரைந்தோடிய தாயையும் அக்கும்பல் தாக்கியது. மேலும், அப்பெண்ணின் ஆடையைக் கிழித்ததோடு, அவரைக் கொன்றுவிடுவதாகவும் அக்கும்பல் மிரட்டியது.
தாயும் மகனும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து,, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அக்கும்பல்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. ஆனாலும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.