அதிசயம்! மாண்டதாக அறிவிக்கப்பட்டவர் ஆம்புலன்ஸ் குலுங்கியதால் மீண்டார்

அதிசயம்! மாண்டதாக அறிவிக்கப்பட்டவர் ஆம்புலன்ஸ் குலுங்கியதால் மீண்டார்

1 mins read
1eb96d19-f152-4f63-a262-e01eed4a0b53
தர்ஷன் சிங் பிரார் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். - படம்: என்டிடிவி

சண்டிகர்: இந்தியச் சாலைகளில் காணப்படும் குழிகளால் இதுவரை பலரும் கசப்பான அனுபவத்தையே எதிர்கொண்டிருப்பர். அவற்றால் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் சாலைக்குழியால் 80 வயது முதியவர் ஒருவர் உயிர்பிழைத்ததாக அவருடைய குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 11) தர்ஷன் சிங் பிரார் என்ற அம்முதியவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து, பாட்டியாலாவில் இருந்து திரு பிராரின் சொந்த ஊரான கர்னாலுக்கு அவரது உடல் அவசர மருத்துவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு கூடியிருந்த உறவினர்கள் அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், பிராரின் உடலைக் கொண்டுவந்த ஆம்புலன்ஸ் சாலைக்குழியில் இறங்கியதால் குலுங்கியது.

அப்போது, தன் தாத்தாவின் கை அசைந்ததைக் கண்டதாக அவருடைய பேரன் கூறினார். இதனால், அவர் உயிருடன் இருக்கலாம் என்றெண்ணிய பேரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

அங்கு பிரார் உயிருடன் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதய நோயாளியான பிரார் இப்போது கர்னாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

மாண்டவர் மீண்டதை அற்புதமான நிகழ்வு எனக் குறிப்பிடும் பிராரின் குடும்பத்தினர், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்