மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு வெளிநாடுகளிலிருந்து கொலை மிரட்டல்

மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு வெளிநாடுகளிலிருந்து கொலை மிரட்டல்

1 mins read
a314c261-8bbd-4e44-8e6c-85cdb624257f
விக்ரம் சாவோ என்பவர் பிரதமர் மோடிக்கு மசாலா பொரி, வெங்காயம், மிளகாய், எண்ணெய் ஆகியவை கலந்த பேல்பூரி செய்து கொடுத்தார். - படம்: எக்ஸ்/ நரேந்திர மோடி
Google News Preferred Icon

கோல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தல் பிரசாரத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பேல்பூரி விற்ற நபருக்குப் பாகிஸ்தான், பங்ளாதே‌ஷ் ஆகிய நாடுகளிலிருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத் தேர்தலை முன்னிட்டு, ஜார்கிராம் நகரில் பிரதமர் மோடி ஏப்ரல் 19ஆம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது சாலையோரக் கடை ஒன்றில் பிரதமர் மோடி பேல் பூரி வாங்கினார்.

அந்தக் கடையில் இருந்த விக்ரம் சாவோ என்பவர் பிரதமர் மோடிக்கு மசாலா பொரி, வெங்காயம், மிளகாய், எண்ணெய் ஆகியவை கலந்த பேல்பூரி செய்து கொடுத்தார்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதால், விக்ரம் சாவோ மற்றும் அவரது கடை பிரபலம் அடைந்தது.

இந்நிலையில், தனது கைப்பேசிக்குப் பாகிஸ்தான், பங்ளாதே‌ஷிலிருந்து மர்ம நபர்கள் காணொளி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதாக விக்ரம் சாவோ புகார் கொடுத்துள்ளார்.

“காணொளி அழைப்பில் மர்ம நபர்கள் முதலில் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பின்னர் கொலை செய்யப்படுவாய் என மிரட்டுகின்றனர்,” என்று விக்ரம் சாவோ தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், விக்ரம் சாவோ குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்