தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகர் தர்ஷனை பெல்லாரி சிறைக்கு மாற்ற முடிவு

2 mins read
d781c46b-81db-452b-840d-685aae21d3f8
நடிகர் தர்ஷன் - படம்: சமூக ஊடகம்

பெங்களூரு: கன்னட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தர்ஷன். அவரது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக ஊடகங்கள் வழி ரசிகர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்தார்.

ரேணுகா சுவாமி என்ற அந்த ரசிகர் அண்மையில் கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்பான வழக்கில் கடந்த ஜூன் மாதம் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் அவருடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹார மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ளன‌ர்.

இந்நிலையில், தர்ஷன் சிறையில் தேநீர் கோப்பையுடன் சிகரெட் புகைத்தவாறு நண்பர்களுடன் உல்லாசமாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தர்ஷன் கைப்பேசியில் பேசுவது போன்ற காணொளியும் வெளியானது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தர்ஷன் உள்ளிட்ட நான்கு பேர் மீது விதிமுறைகளை மீறியதாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பணியில் அலட்சியமாக இருந்ததாக சிறையின் தலைமை கண்காணிப்பாளர் சேஷ மூர்த்தி உள்ளிட்ட ஒன்பது அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா செவ்வாய்க்கிழமையன்று சிறைத்துறை டிஜிபி மாலினி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விதிமுறையை மீறிய கைதிகள் மீதும், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்‌க பரமேஸ்வரா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது .

மேலும் தர்ஷனை பெங்களூரு சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதனிடையே சிறைத்துறை நிர்வாகம், தர்ஷனுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த குற்றவாளிகளான வில்சன் கார்டன் நாகா, குள்ள சீனா ஆகிய இருவரையும் வேறு சிறைக்கு மாற்றக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்