புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
எனவே பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கட்சி எம்பிக்கள் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா தோற்கடிக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 18ஆம் தேதி பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாகவும் அப்போது மசோதாவைத் தடுத்ததாகக் கூறி எதிர்க்கட்சி எம்பிக்களைப் பிரதமர் விமர்சித்ததாகவும் திரு வேணுகோபால் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி, தனது கடமையைச் செய்வதைக் கேள்விக்கு உட்படுத்துவது தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, அது நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான நேரடி அவமதிப்பு எனக் குறிப்பிட்டுள்ள அவர், எம்பிக்கள் மீது அவதூறு சுமத்தியதற்காக, பிரதமர் மோடி மீது மக்களவை உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தின் புனிதத்தையும் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பாதுகாப்பையும் நிலைநிறுத்த, சபாநாயகர் இவ்விவகாரத்தில் உடனடி, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேணுகோபால் வலியுறுத்தி உள்ளார்.
“பதவியில் இருக்கும் பிரதமரின் நாட்டு மக்களுக்கான உரை என்பது இதுநாள்வரை எப்போதும் தேசிய ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு மேடையாகவே இருந்து வந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஆனால், பிரதமரின் அண்மைய உரையின்போது அவரது வெட்கமற்ற கட்சி சார்பு பேச்சு, காங்கிரஸ் கட்சியின் மீது 59 முறை நடத்தப்பட்ட தாக்குதல்கள், பிரதமராக அவரது வரலாற்றில் மற்றொரு நிரந்தரக் கறையாக இருக்கும்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

